Tuesday 26 December 2017

வறுமைக்கு நடுவில் சாதனை : சர்வதேச கால்பந்து போட்டி நடுவரான ரூபா தேவி




திண்டுக்கல்    மாவட்டத்தை   சேர்ந்த    24 வயது பெண்    ரூபா தேவி,    கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற   சர்வதேச அளவில்   புகழ்பெற்ற பிபா கால்பந்து போட்டிகளின் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.   இந்தியாவிலிருந்து    பிபா கால்பந்து  போட்டிக்கு நடுவராக   தேர்வு பெற்று   கலந்து கொண்ட    ஐந்தாவது பெண் ரூபா தேவி (தமிழகத்திலிருந்து முதல் பிபா நடுவர்). 

வேதியியல் துறையிலும், விளையாட்டு துறையில் பட்டப்படிப்பு படித்துள்ள ரூபா தேவி தன் தாயையும், தந்தையையும் இழந்த பின்பு மாநில அளவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடுவதன் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு தன் வாழ்கையை நடத்தியுள்ளார். 2012ஆம் ஆண்டு கால்பந்து நடுவராவதற்கு பயிற்சி அளிக்கும் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்ற இவர், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 2016 ஆம் ஆண்டில் பிபா சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கு நடுவராக தேர்வு செய்யப்பட்டார். 



சிறு வயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்ற ரூபா தேவி கால்பந்து விளையாட்டை தான் மிகவும் விரும்பி விளையாடுவதாகவும், கால்பந்து விளையாடுவது தனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருவதாகவும், கால்பந்து விளையாட்டில் தான் கொண்டிருந்த தணியாத ஆர்வமும், தொடர் பயிற்சியும் தன்னை இந்த நிலைக்கு உயர்த்தி உள்ளதாகவும் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 


வறுமைக்கு நடுவில் கடுமையாக உழைத்து போராடி தன் வாழ்க்கையையும் பார்த்து கொண்டு, கால்பந்து விளையாட்டிலும் கவனம் செலுத்தி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் ரூபா தேவியின் சாதனை கால்பந்து விளையாட்டில் இந்தியாவை சேர்ந்த இன்னும் பல பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சாதனைகள் பல புரிந்திட ஊக்கம் அளிக்கும் என்று நம்பலாம். 
----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 18 December 2017

வீட்டிலேயே கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ப்ளம் கேக் & சாக்லேட் ஃபில்லிங் கேக் ( ஓவன் இல்லாமல் )

ஸ்பெஷல் ப்ளம் கேக்



தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 250 கிராம்
வெண்ணெய் - 250 கிராம்
முட்டை - 5 எண்ணிக்கை
சோள மாவு - 10 கிராம்
நன்கு பொடியாக்கப்பட்ட சர்க்கரை - 250 கிராம்
ரம் எசன்ஸ் - 5 மில்லிகிராம்
சாக்லேட் எசன்ஸ் - 5 மில்லிகிராம்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
தூள் உப்பு - ஒரு சிட்டிகை

உலர் பழங்கள், பருப்புகள் ஒவ்வொன்றும் 50 கிராம்:
பேரிச்சம் பழம், டூட்டி ப்ரூட்டி, உலர் கருந்திராட்சை, முந்திரிபருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, செர்ரி பழம், ஆரஞ்சு பீல், பொடிக்கபட்ட பட்டை, - இவைகளில் ஒரு பாதியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும், மறு பாதியை மிக்சியில் அடித்து வைத்து கொள்ளவும்.    

கேரமல் சிரப்: நான்கு ஸ்பூன் சர்க்கரையை தவாவில் போட்டு தண்ணீர் விடாமல் சூடாக்கவும், சர்க்கரை உருகி அடர்த்தியான தேன் நிறத்துக்கு வரும்போது அடுப்பை அணைத்து விட்டு உடனே சிறிதளவு தண்ணீர் விட்டு கலக்கி கொள்ளவும், கேரமல் சிரப் தயார். 

மைதா மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் சேர்த்து சலித்து எடுத்து கொண்டு அதில் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட உலர் பழங்கள், பருப்புகளை சேர்த்து கலக்கி தனியே எடுத்து வைக்கவும். ஓரு பாத்திரத்தில் 1/4 கிலோ வெண்ணையை எடுத்து கொண்டு அதை முட்டை அடிக்கும் கரண்டியால் நன்கு கலக்கி கொண்டு அதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும், பின்னர் வெண்ணெய் சர்க்கரை கலவையில் ஐந்து முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கலக்கி கொள்ளவும், இந்த கலவையில் ரம் எசன்சம், சாக்லேட் எசன்சம் ஒவ்வொரு மூடி ஊற்றி கலக்கவும்.  பின்னர் பொடியாக அரைக்கப்பட்ட உலர் பழங்கள், பருப்புகள் ஆரஞ்சு பீல், பொடிக்கபட்ட பட்டை தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதில் ஏற்கெனவே செய்து வைத்த கேரமல் சிரப் மூன்று அல்லது நான்கு டேபிள் ஸ்பூன் சேர்த்து கலக்கி கொள்ளவும். இந்த கலவையில் சலித்து வைத்த மைதா மாவு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கி கொள்ளவும். கேக் தயாரிக்க தேவையான மாவு தயார். 

அடிபாகம் சமமாய் இருக்க கூடிய ஒரு அலுமினிய பாத்திரத்தில் வெண்ணையை தடவி அதன் மேல் ஒரு ஸ்பூன் மைதாவை தூவி கோட்டிங் கொடுத்து, இந்த பாத்திரத்தில் கேக் மாவை கொட்டி எடுத்து கொள்ளவும். காஸ் அடுப்பின் மேல் ஒரு சிறு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் தவாவை வைத்து, அடுப்பை பற்ற வைத்து தவா நன்கு சூடானவுடன், அடுப்பை சிம்மில் வைத்து கொண்டு, தவாவின் மேல் கேக் மாவு இருக்கும் அலுமினிய பாத்திரத்தை ஒரு சிறு துளையுள்ள மூடியை வைத்து மூடி விடவும், 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை வேக விடவும், நன்கு வெந்தவுடன் கேக் வாசனை வரும். நன்கு வெந்து தயாரான கேக்கை கத்தியால் குத்தி எடுத்தால்  ஒட்டாமல் வரும் அதை வைத்து கேக் நன்கு வெந்து விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். சில நிமிடங்கள் ஆறவிட்டு கேக் பாத்திர ஓரங்களில் ஒட்டியிருந்தால் அதை கத்தி கொண்டு பிரித்து விட்டு கேக்கை ஒரு தட்டில் எடுத்து துண்டுகள் போடவும்.   ஸ்பெஷல் ப்ளம் கேக் தயார்.  



ஓவன் இல்லாமல் குக்கரில் சாக்லேட் ஃபில்லிங் கேக்

தேவையான பொருட்கள்:
மைதா மாவு 1 கப்
நன்கு பொடியாக்கப்பட்ட சர்க்கரை - 1 கப்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
தூள் உப்பு - ஒரு சிட்டிகை
வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
முட்டை - 2
வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
சூரியகாந்தி எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சாக்லேட் சிரப் - 1/2 கப்



செய்முறை: 
மைதா மாவு, பேக்கிங் பவுடர், தூள் உப்பு மூன்றையும் சேர்த்து சலித்து தனியே எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெயுடன் பொடியாக்கப்பட்ட சர்க்கரையை சேர்த்து கலக்கவும், பின்பு முட்டை, வெண்ணிலா எசன்ஸ், எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும், இந்த கலவையில் ஏற்கெனவே சலித்து     வைத்திருக்கும்    மைதா மாவு    கலவையை     சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதன் மேல் சிறிது மைதா மாவை தூவி விடவும். பின்னர் அதில் மைதா மாவு கலவையை ஊற்றவும், பிரஷர் குக்கர் அடி பாத்திரத்தில் மண் அல்லது உப்பை பரப்பி அதன் மேல் ஒரு மூடிஅல்லது தட்டு போட்டு அதன் மேல் மைதா மாவு கலவை பாத்திரத்தை வைத்து குக்கரை வெயிட் போடாமல் மூடி போட்டு முதல் ஐந்து நிமிடங்கள் ஹை ப்ளேமிலும், அடுத்த முப்பது முதல் முப்பத்தி ஐந்து நிமிடங்கள் நேரம் (சிம்) லேசான சூட்டிலும் வைக்கவும். நன்கு வெந்து தயாரான கேக்கை கத்தியால் குத்தி எடுத்தால்  ஒட்டாமல் வரும் அதை வைத்து கேக் நன்கு வெந்து விட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.  தயாரான கேக் ஆறிய பிறகு இரண்டாக வெட்டி அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி, அதன் மேல் வெட்டப்பட்ட இன்னொரு கேக் துண்டை வைத்து அதன் மேலும் சாக்லேட் சிரப் ஊற்றினால் சாக்லேட் ஃபில்லிங் கேக் தயார். 

----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 11 December 2017

செய்து பாருங்கள்: அழகிய லேடீஸ் பர்ஸ்



தேவையான பொருட்கள்:
உங்களுக்கு பிடித்த நிறத்தில் பளபளப்பான துணி
பழைய நோட்டு புத்தகங்களில் உள்ள பைண்டு அட்டை
பர்ஸ் ஓரத்தில் ஓட்டுவதற்கு அழகிய வேலைப்பாடு கொண்ட தங்க நிற  ஜரிகை பட்டை (பேன்சி கடைகளில் கிடைக்கும்) 
அழகிய கல் பதித்த டாலர் ஒன்று
பர்சை மூட இரண்டு ஸ்ட்ராப்கள்  
கத்திரிக்கோல்
ஓட்டுவதற்கு பெவிகால் அல்லது க்ளூ

செய்முறை:
* நோட்டு அட்டையை காணொளி காட்சியில் காண்பிக்கப்பட்டிருக்கும் அளவுகளில் துண்டுகளாக வெட்டி கொள்ளவும். 
* வெட்டப்பட்ட அட்டைகளை துணியின் மேல் வைத்து அளவை சரி பார்த்த பின்பு பெவிகால் அல்லது குளூ கொண்டு துணியில் ஒட்டி கொள்ளவும்.
* அட்டை ஒட்டிய துணியின் ஓரங்களில் அழகிய ஜரிகை பட்டையை ஒட்டி கொள்ளவும் 
* துணி ஒட்டப்பட்ட அட்டையை காணொளி காட்சியில் காண்பிக்கப்பட்டிருப்பது போல் மடித்து கொள்ளவும்
* மடிக்கப்பட்ட அட்டையின் இருபுறமும் காணப்படும் இடைவெளியை சிறு துணி துண்டுகள் கொண்டு ஒட்டி மூடவும்
* பர்சை அழுத்தமாக மூடுவதற்கு ஸ்ட்ராப்களை க்ளூ கொண்டு பர்சின் முக்கோண பகுதியின் உட்புறத்திலும், செவ்வக பகுதியின் வெளிபுறத்திலும் ஒட்டி கொள்ளவும்     
* பர்ஸ் மூட பயன்படும் முக்கோண மேல் அட்டையின் மேல் அழகிய கல் பதித்த டாலரை ஒட்டவும்
* அழகிய கண்ணை கவரும் பர்ஸ் தயார். 

----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 4 December 2017

ஒரே வாரத்தில் அடர்த்தியான கூந்தலுக்கு


தேவையான பொருட்கள்:

3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 
3 ஸ்பூன் சோற்று கற்றாழை ஜெல்
1 இ வைட்டமின்  காப்சூல்

செய்முறை:

ஒரே வாரத்தில் முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளருவதற்கும் இந்த எண்ணெய் குளியல் உதவுகிறது. 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும், சோற்று கற்றாழை ஜெல் கடையில் வாங்கி கொள்ளலாம் அல்லது தோட்டத்தில் உள்ள சோற்று கற்றாழையை பறித்து நீங்களே சோற்று கற்றாழை ஜெல் தயாரித்து கொள்ளலாம். 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன், 3 ஸ்பூன் சோற்று கற்றாழை ஜெல்லை நன்கு ஸ்பூனால் அடித்து கலக்கவும். இதனுடன் 1 இ வைட்டமின்  காப்சூல் சேர்க்கவும். (இ வைட்டமின் கேப்சூல் மருந்து கடைகளில் பத்து கேப்சூல்கள் கொண்ட ஒரு பட்டை இருபது முதல் முப்பது ரூபாயில் கிடைக்கும்)

இந்த எண்ணெய் கலவையை தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தேய்த்து விடவும். அரை மணி நேரம் கழித்து சீயக்காய் தூள் தேய்த்து குளிக்கவும். இந்த எண்ணெய் குளியலை ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்து வந்தால் ஒரே வாரத்தில் முடி கொட்டுவது நிற்பதுடன் கூந்தல் அடர்த்தியாகவும் வளர தொடங்கும். 


----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 28 November 2017

சந்தா கோச்சார் சொல்லும் வெற்றிக்கு ஏழு விதிகள்

ந்தா கோச்சார், ஆண்கள் பெருமளவில் மிக பெரிய தலைமை பொறுப்புகளை வகிக்கும் வங்கி துறையில் ஒரு தனியார் வங்கியின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் பொறுப்பேற்று, வெற்றிகரமாக நடத்தி வருகிறார், பல கருத்தரங்குகளில் இவர் ஆற்றிய உரைகள், கொடுத்துள்ள பேட்டிகள், தொழில் துறையில் பெண்களை, இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையிலும், முன்னேற்ற பாதையில் வழிநடத்தும் வகையிலும் இருக்கிறது. சில கருத்தரங்குகளில் ஆங்கிலத்தில் இவர் ஆற்றிய உரைகளின் சிறு தொகுப்பை காணொளி காட்சியாக காணலாம். அவரது பேச்சின் தமிழாக்கம் சுருக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.       

எப்போதும் கற்று கொண்டிருங்கள்
கல்லூரியில் படித்து முடித்து பட்டம் வாங்கி வெளியில் வந்து விடுவதோடு படிப்புக்கு முற்றுபுள்ளி வைத்து விடாதீர்கள். உண்மையில் நீங்கள் வெளி உலகில் வேலைக்கு செல்லும் போது தான் நிறைய விஷயங்களை அனுபவப்பூர்வமாக கற்று கொள்வீர்கள் (புத்தக படிப்பு வேறு, அனுபவ அறிவு வேறு). வெற்றி பெறுவதற்கு வெறும் புத்தக படிப்பு மட்டும் போதாது, அனுபவ அறிவு வேண்டும். அதனால், ஒவ்வொரு நாளும் நீங்கள் புதிய விஷயங்களை பற்றி அறிந்து கொள்வதில் கற்று கொள்வதில் ஆர்வத்தோடு இருங்கள். 


கடும் உழைப்புக்கு மாற்று வேறில்லை

உழைப்பு தான் வெற்றிக்கு வழி வகுக்கும், கடுமையாக உழைத்தால் எந்த துறையிலும் நிச்சயமாக வெற்றி பெறலாம். உழைப்போடு கூட இன்றைக்கு ஒவ்வொரு துறையிலும் விஞ்ஞான முன்னேற்றம் காரணமாக மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது, ஒவ்வொரு துறையிலும் வரும் மாற்றங்களுக்கு ஏற்ப உங்களை நீங்களே தயார்படுத்தி கொள்ளுங்கள்.

உங்களால் செய்ய முடியும் என்று நம்புங்கள்

ஒரு விஷயத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலாவது உங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை இருக்க வேண்டும், இந்த காரியத்தை என்னால் உறுதியாக செய்து முடிக்க முடியும் என்று நம்புங்கள். நீங்கள் உங்களால் முடியும் என்று நம்பினால் தான் வெற்றி பெற முடியும், வாழ்கையில் சில துறைகளில் பெண்கள் சாதிக்க முடியாமல் போவதற்கு காரணம் இதெல்லாம் என்னால் செய்ய முடியாது என்ற நினைப்பு தான். தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறியுங்கள், வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். 

நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, எதை நேசிக்கிறீர்களோ அதை செய்யுங்கள்

இன்றைக்கு பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி வருகின்றனர், எல்லா துறைகளிலும் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. உங்களுக்கு எந்த துறையை பிடிக்கிறதோ அந்த துறையை தேர்ந்தெடுத்து படியுங்கள். பின்பு அந்த துறையில் நீங்கள் தான் வல்லுநர் என்று சொல்லும்படி அந்த துறையில் சகலதையும் கற்று கொள்ளுங்கள். எந்த ஒரு துறையில் வெற்றி பெற விரும்பினாலும் அந்த துறையில் உங்களுக்கு விருப்பம் இருக்க வேண்டும். நீங்கள் விரும்பி செய்யும் வேலையில் தான் வெற்றி பெற முடியும். 

உங்கள் கனவு பெரியதாக, உயர்ந்ததாக இருக்கட்டும்

வருங்காலம் குறித்த உங்களுடைய கனவு அல்லது இலக்கு மிக பெரியதாக, உயர்ந்ததாக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள், உங்களை சூழ்ந்து இருக்கும் தொழில் துறை வாய்ப்புகளை பற்றி எப்போதும் விழிப்போடு இருங்கள். உங்களுக்கு ஏற்ற சரியான துறையை தேர்ந்தெடுத்த பின் உங்கள் இலக்கை அடைவதற்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்த துவங்குங்கள். பலர் கனவு காண்பதோடு நின்று விடுகிறார்கள், சரியான திட்டமிடுதலும், திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகளும் அறிந்திருந்தால் தான் வெற்றி இலக்கை அடைய முடியும்.

வெற்றியில் ஊழியர்களின் பங்கு

ஒரு தொழில் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஊழியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். எந்த தொழிலிலும் சில சோதனையான நேரங்கள் வரக்கூடும். அந்த சோதனையான நேரத்தில் ஊழியர்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து நிர்வாகத்தோடும், வாடிக்கையாளர்களோடும் நல்ல தொடர்பில் இருந்தால், நிர்வாகம் எப்போதும் வாடிகையாளர்களை கைவிடாது என்ற நல்ல நம்பிக்கையை ஊழியர்கள் கொடுத்து வந்தால் அந்த நிறுவனம் எவ்வளவு பெரிய சரிவிலிருந்தும் மீண்டு வந்து விடும். 

மிக சிறந்ததை கொடுங்கள்

ஒரு வேலையை உங்களால் எவ்வளவு சிறப்பாக செய்து கொடுக்க முடியுமோ உங்கள் திறமை அனைத்தையும் பயன்படுத்தி அவ்வளவு சிறப்பாக செய்து கொடுங்கள். அந்த வேலையை மற்றவர்கள் எப்படி செய்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள், பின்பு அந்த வேலையை மற்றவர்களை விட உங்களால்   எப்படி   சிறப்பாக   செய்ய   முடியும்   என்று    யோசித்து    பின்னர்
அந்த வேலையை உங்கள் மனநிறைவுக்காக மட்டுமல்லாமல் வாடிக்கையாளரும் மிக சிறப்பான பணி அன்று சொல்லி வாழ்த்தும் வகையில் செய்து கொடுங்கள், அப்போது அந்த துறையில் உங்களின் வெற்றி நிச்சயம்.   

Monday 20 November 2017

17 வருடங்களுக்கு பின்பு மீண்டும் இந்திய பெண்ணுக்கு உலக அழகி பட்டம்

டந்த நவம்பர் 18 ஆம் தேதி சீனாவின் சான்யா சிட்டியில், 118 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டு போட்டியிட்ட உலக அழகி போட்டியில் எல்லோரையும் புறந்தள்ளி உலக அழகி பட்டம் வென்றுள்ளார் இந்தியவை சேர்ந்த மானுஷி சில்லார்.



20 வயதான மானுஷி சில்லார், ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். செயின்ட் தாமஸ் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து முடித்துள்ளார்.  இவரது தாயார், நீலம் சில்லாரும் மருத்துவ படிப்பு படித்து தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை, மித்ர பாசு சில்லார், டிஆர்டிஓ - வில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.



மானுஷி சில்லார் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே விளம்பரங்களில் மாடலாக பணிபுரிந்துள்ளார்,  இதற்கு முன்பு பெமினா மிஸ் இந்தியா போட்டியில் வென்றுள்ளார், இந்த வெற்றியே இவருக்கு உலக அழகி போட்டியில் பங்குபெறும் வாய்ப்பையும், நம்பிக்கையையும் தந்தது.



வெறும் உடல் அழகை மட்டும் வைத்து உலக அழகி பட்டம் கொடுக்கப்படுவதில்லை . இறுதி சுற்றில் போட்டில்யில் கலந்து கொள்ளும் அழகிகளின் அறிவுத்திறனும் சோதிக்கப்படும். இறுதி சுற்றில் ஐந்து நாடுகளின் அழகிகள் களத்தில் இருந்த நிலையில் மானுஷி சில்லாரிடம் போட்டி நடுவர்களால் ஒரு கேள்வி கேட்டனர் . "உலகத்திலேயே அதிக சம்பளம் பெறக் கூடிய வேலை எது? ஏன்?” என்று விளக்கம் தர சொல்லியுள்ளனர்.  

இந்த கேள்விக்கு மானுஷி அளித்த பதில் தான் உலக அழகி பட்டத்தை அவருக்கு வென்று தந்துள்ளது.  "உலகத்திலேயே மிக உயர்வான வேலை அம்மாவாக இருப்பதுதான். தாயாக இருப்பது தான் மிக உயர்ந்த பதவி. தாய்க்கு தான் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். ஆனால் அதை நாம் பணமாக கொடுப்பது அல்ல. அன்பும் மரியாதையுமாக அது கொடுக்கப்படவேண்டும். அப்படித்தான் கொடுத்து கொண்டிருக்கிறோம். எனக்கு என் அம்மா தான் எப்போதும் ஊக்கம் அளிக்கக் கூடியவர், ஒவ்வொரு அம்மாவும் தன் பிள்ளைகளுக்காக வாழ்கையில் எவ்வளவோ விஷயங்களை விட்டு கொடுக்கின்றனர்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். 

இவரது தாயை, தாய்மையை போற்றும் இந்த பதில் போட்டி அரங்கில் இருந்த நடுவர்களை நெகிழ செய்து விட்டது. மானுஷி சில்லாருக்கு உலக அழகி பட்டமும் வென்று தந்து விட்டது. இதற்கு முன்பு 1994 ஆம் ஆண்டு  ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் வென்றார், அதன் பின்னர் பிரியங்கா சோப்ரா 2௦௦௦ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஆறு முறை இந்தியாவை சேர்த்தவர்கள் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர்.



இந்த வெற்றி செய்தி கேள்விப்பட்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி "வாழ்த்துக்கள் உங்கள் வெற்றியால் இந்தியா பெருமைபடுகிறது" என்று வாழ்த்தியுள்ளார்.


இந்த வெற்றி செய்தி கேள்விப்பட்ட ஹரியானா முதல்வர் விபுல் கோயல் "உங்கள் வெற்றி உலகமெங்கும் வாழும் ஹரியானா மாநில பெண்களை பெருமைப்பட வைத்ததுள்ளது,  உலக அழகி பட்டம் வெல்லும் ஆறாவது இந்தியரான மானுஷி சில்லாருக்கு வாழ்த்துக்கள், உங்களால் நாங்கள் மிகவும் பெருமை அடைந்துள்ளோம்" என்று ட்வீட் செய்துள்ளார். 
----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 6 November 2017

போராடி வென்ற பெண்: மலாலா யூசுஃப்சாய்


ப்போது எந்த நேரத்தில் எங்கு குண்டு வெடிக்குமோ அல்லது துப்பாக்கி சூடு நடக்குமோ என்று மக்கள் அஞ்சி நடுங்கும் தேசத்தில், பழமைவாதம் பேசும் தாலிபான் தீவிரவாதிகள் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் ஒரு பெண்ணால் அவர்களை எதித்து போராடி வெற்றி பெற முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் மலாலா யூசுஃப்சாய். 

பெண்கள் பள்ளிக்கு சென்று கல்வி கற்பதே பாவம் என்று எண்ணும் பழமைவாதத்தில் ஊறிப்போன தாலிபான் தீவிரவாதிகள் நிறைந்த பாகிஸ்தான் நாட்டில், ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மிங்கோரா என்ற சிற்றூரில் 1997ஆம் ஆண்டு பிறந்த மலாலா யூசுஃப்சாய்க்கு சிறு வயது முதல் நன்றாக படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்து வந்தது. அவரது குடும்பமும் அவர் படிப்புக்கு தடை விதிக்கவில்லை. 2004ஆம் ஆண்டு வரை, எல்லாம் நன்றாகவே இருந்தது, ஆனால் தாலிபான் தீவிரவாதிகள் இவர்கள் வாழ்ந்த பகுதியை ஆக்கிரமித்த பின் நிலைமை தலைகீழானது, மக்கள் கல்வி அறிவு பெற்று விட்டால் பழமைவாத கொள்கைகளுக்கு மதிப்பில்லாமல் போய் விடும் என்பதால் தாலிபான்கள் பல பள்ளிகள் கல்லூரிகளை குண்டு வைத்து தகர்த்தனர். இவர்களை எதிர்க்கும் ஆண்கள் வாளால் வெட்டி கொல்லப்பட்டனர், பெண்கள் சவுக்கடி கொடுத்து சித்திரவதை செய்யப்பட்டனர், கொலை, கொள்ளை, துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்புகள் போன்றவை தினசரி வாழ்க்கை முறையாக மாறி போனது.  அவர் வாழ்ந்து வந்த சமூகத்தை கட்டுப்படுத்த தொடங்கிய தாலிபான் தீவிரவாதிகளுக்கு பெண்கள் பள்ளி சென்று கல்வி கற்பது கண்களை உறுத்தி கொண்டே இருந்துள்ளது. தாலிபான் தீவிரவாதிகளின் தடையை மீறி மலாலா பள்ளிக்கு சென்றார். 
   
2009ஆம் ஆண்டு மலாலா பிபிசி வலைபக்கத்தில் தனது ஊரில் வசிக்கும் மக்கள் தாலிபான் தீவிரவாதிகளால் சந்தித்து வரும் இன்னல்களை குறித்து எழுதிய வலைபதிவு உலக மக்களின் கவனத்தை இவர் ஊரின் பக்கம் திருப்பியது, ஆனாலும் அந்த வலைப்பதிவை இவர் புனைப்பெயரில் எழுதியதால் இவர் யார் என்று உலகுக்கு தெரியாமல் இருந்து வந்தது. பின்பு ஒரு தொலைக்காட்சிக்கு இவர் அளித்த நேரலை பேட்டி மூலம் இவரின் பெயரும், முகமும் உலகுக்கு அறிமுகமானது, அது முதல் தாலிபான் குழுக்களின் கோபத்திற்கு இலக்கானார். 



2012 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி, மலாலா படித்த பள்ளிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் மலாலா தலையில் குண்டு பாய்ந்து மயங்கி சரிந்தார், மலாலா சுடப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவ தொடங்கியது, மருத்துவமனையில் உயிருக்கு போராடிய மலாலாவுக்கு தகுந்த நேரத்தில் அளிக்கப்பட்ட சரியான மருத்துவ சிகிச்சையாலும், உலக மக்களின் வேண்டுதல்களாலும் மீண்டும் புத்துயிர் பெற்று எழுந்தார். இந்த சம்பவத்திற்கு பின்பு, பெண் கல்வியின் முக்கித்துவம் குறித்தும் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் இன்னும் அதிகமாக எழுதவும், மேடைகளில் பேசவும் துவங்கினார். 



2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஹாவர்ட் பல்கலைகழகம் வழங்கிய மனித உரிமைக்கான விருதும், 2014ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசை சிறார் உரிமைக்காக பாடுபட்ட இந்தியரான கைலாஷ் சத்யார்த்தியோடு இணைந்து பெற்றார். எண்ணற்ற விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் மலாலாவுக்கு குவிய துவங்கினாலும், இன்னொரு புறம் "மீண்டும் உயிரோடு திரும்பி வந்தால் கொன்று போடுவோம்" என்று தாலிபான்கள் இவரது உயிருக்கு உலை வைக்க காத்திருக்கின்றனர். 



இவரை கொல்ல துடிக்கும் தீவிரவாதிகள் குறித்து மலாலாவிடம் கேட்டால் அவர் கூறும் பதில் தீவிரவாதிகளுக்கு சவுக்கடி கொடுப்பது போல் உள்ளது: இப்பொழுதும் என்னால் அந்த சம்பவத்தை தெளிவாக நினைவுகூர முடிகிறது, அவர்கள் என்னை கொல்ல வந்தாலும், அவர்களிடம் நான்  "அவர்கள் செய்வது தவறு என்று சொல்லி, பெண்கள் கல்வி கற்பது எங்களின் அடிப்படை உரிமை என்று வலியுறுத்தவே விரும்புகிறேன்" என்கிறார் மலாலா யூசுஃப்சாய்.

----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 31 October 2017

பெண்கள் பாதுகாப்பு கருவிகள்

ம் நாட்டில் படிப்பு, வேலை என்று வீட்டை விட்டு தனியாக வெளியே செல்லும் பெண்கள் திரும்பவும் பத்திரமாக வீடு திரும்புவார்களா? என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பெண்களுக்கு ஒரு சில வக்கிரம் பிடித்த ஆண்களால் (எல்லா ஆண்களையும் சொல்லவில்லை) நேரும் கொடுமைகள் பயங்கரமானவை. ஒவ்வொரு வருடமும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நம் நாட்டில் அதிகரித்து கொண்டே வருகின்றது. ஒரு சில சம்பவங்கள் வெளி உலகுக்கு தெரிய வருகிறது, பல சம்பவங்களில் சம்பந்தப்பட்ட பெண்களின் எதிர்கால வாழ்க்கை குறித்த அச்சத்தினால் வெளி உலகுக்கு தெரிவிக்காமலே பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளை மனதுக்குள் வைத்து குமுறுகின்றனர்.


ஐந்து மாத குழந்தை முதல் நூறு வயது கிழவி யாரையும் இந்த காம வெறி பிடித்த மனித மிருகங்கள் விட்டு வைக்கவில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கீழ்தட்டு சமூக மக்களிடம் மட்டும் தான் என்றில்லை, நன்கு படித்து, வேலைக்கு சென்று, கை நிறைய சம்பாதிக்கும் மேல்தட்டு பெண்களும் கூட தங்கள் அலுவலகங்களில் உடன் வேலை பார்க்கும் ஆண்களாலும், மேலதிகாரிகளாலும் இந்த கொடுமைகளுக்கு தப்புவதில்லை. பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்க செல்லும் பெண்களை காதல் என்ற பெயரில் இளம் பெண்களை சுற்றிவரும் ஒரு சிலர் தான் காதலிக்கும் பெண் தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டாலோ அல்லது திரும்ப தன்னை காதலிக்கா விட்டாலோ அவளை தொடர்ந்து சீண்டி வேதனைக்கு உள்ளாக்குவதும் நடந்து வருகிறது. 

உடலுக்கு எதாவது நோய் வரும் போல் தெரிந்தால் வருமுன் காப்பதற்காக தடுப்பூசி போட்டு கொள்வது போல், இந்த வக்கிரம் பிடித்த மனித மிருகங்கள் வாழ்கையில் குறுக்கிட்டால் அவைகளிடமிருந்து காத்து கொள்ள இந்த தலைமுறை பெண்களுக்கு சில பாதுகாப்பு கருவிகள் இப்போது ஆன்லைனில் கிடைக்க துவங்கியுள்ளது. அத்தகைய பாதுகாப்பு கருவிகள் சிலவற்றை ஓவ்வொன்றாக பார்க்கலாம். 

 பெப்பர் ஸ்ப்ரே: 

ரூம் ஸ்ப்ரே கேள்விபட்டிருப்பீர்கள், அந்த குப்பியில் வாசனை திரவியம் இருக்க வேண்டிய இடத்தில் மிளகு பொடியை நிரப்பி வைத்தால் பெப்பர் ஸ்ப்ரே, கையடக்க பெப்பர் ஸ்ப்ரேயை ஒரு சில நொடிகள் எதிராளி மேல் அடித்தால் கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேல் கண் தெரியாது (கண்ணை திறந்தாலே எரியுமாம்), தனியாக வெளிடங்களுக்கு செல்லும் பெண்கள் அவசியம் வாங்கி வைத்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு சாதனம் இந்த பெப்பர் ஸ்ப்ரே, விளையாட்டுக்கு இதே யார் மேலும் அடித்து விட வேண்டாம், உங்கள் பாதுகாப்புக்கு எதாவது பங்கம் வந்தால் மட்டும் பயன்படுத்துங்கள். தெரியாமல் இதை யாராவது எடுத்து பயன்படுத்திவிட்டால், பாதிக்கப்பட்டவரின் கண்களையும் முகத்தையும் தண்ணீரில் நன்கு கழுவ சொல்லுங்கள். மற்றபடி உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்காது. 



மொபைல் ஸ்டென் கன்: 
பார்ப்பதற்கு மொபைல் போன் போலவே காட்சியளிக்கும் இந்த மொபைல் ஸ்டென் கன்னின் ஒரு பக்கத்தில் இருக்கும் சிறு சுவிட்சை அழுத்தி கொண்டு போனின் முன் பகுதியிலிருக்கும் மெட்டல் பகுதியை எதிராளி மேல் லேசாக உரசினால் போதும், ஹை வோல்ட் கரன்ட் ஷாக் எதிராளி மேல் பாயும், ஒரு சில நிமிடங்களுக்கு சகல நாடியும் ஸ்தம்பித்து போன நிலையில் எதிராளி இருக்கும் போது அந்த இடத்திலிருந்து தப்பிக்க வேண்டியது தான். 





லிப்ஸ்டிக் வடிவ ப்ளாஷ் லைட்: 

பார்ப்பதற்கு லிப்ஸ்டிக் போல காட்சியளிக்கும் இந்த லிப்ஸ்டிக் வடிவ ப்ளாஷ் லைட்டில் உள்ள லைட்டை எதிராளி மேல் அடித்தால் கண்களை குருடாக்குவது போன்ற வெளிச்சம் வரும். ரீசார்ஜபுல் பேட்டரியுடன் வரும் இந்த லிப்ஸ்டிக் வடிவ ப்ளாஷ் லைட் 180 லுமென்ஸ் அளவு வெளிச்சத்தை வெளியிட கூடிய சக்தி வாய்ந்தது. 

                                       



 பெப்பர் பிஸ்டல்: 

முன்பு சொல்லப்பட்ட பெப்பர் ஸ்ப்ரேயின் இன்னொரு வடிவம் தான் இந்த பெப்பர் பிஸ்டல், கையடக்க பெப்பர் ஸ்ப்ரே எற்படுத்தகூடிய அதே விளைவையே இந்த பெப்பர் பிஸ்டலும் ஏற்படுத்தும். இந்த பிஸ்டலை நீங்கள் வெளியே எடுத்தவுடன் எதிராளிக்கு நீங்கள் துப்பாக்கியை எடுக்கிறீர்கள் என்பது தெரிந்து விடும், நிஜ துப்பாக்கி என்று நினைத்து எதிராளி ஓடி விட நேரலாம். 



 ரீசார்ஜபுல் சேஃப்டி டார்ச்: 

பார்ப்பதற்கு டார்ச் போலவே காட்சியளிக்கும் இந்த சேஃப்டி டார்ச்சில் உள்ள இந்த டார்ச் சுவிட்சை அழுத்தி கொண்டு எதிராளி மேல் படும் படி உரசினால் ஹை வோல்ட் கரன்ட் ஷாக் எதிராளி மேல் பாயும். ரீசார்ஜபுல் பேட்டரியுடன் வரும் இந்த சேஃப்டி டார்ச் பெண்களின் பாதுகாப்புக்கு உகந்த சாதனம். 



 ஸெல்ப் டிபன்ஸ் சேஃப்டி ராட்: 

 பழைய ட்ரான்சிஸ்டர் கருவிகளில் உள்ள இழுத்து விட கூடிய ஆன்டெனா கம்பி போல் காட்சியளிக்கும் இந்த கம்பியில் உள்ள பிளாஸ்டிக் பகுதியில் உள்ள சுவிட்சை அழுத்தி கொண்டு எதிராளி மேல் படும் படி உரசினால் ஹை வோல்ட் கரன்ட் ஷாக் எதிராளி மேல் பாயும். இந்த ஷாக் ஒரு சில நிமிடங்கள் எதிராளியை நிலைகுலைய செய்யும் தவிர உடலுக்கு வேறு எந்த தீங்கும் விளைவிக்காது. 



 ஐநூறு ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் விலைக்குள் கிடைக்கும் இந்த சுய பாதுகாப்பு சாதனங்கள் ஆன்லைனில் விற்பனையாகி வருகின்றது. நம் நாட்டில் இந்த கருவிகளின் விற்பனையும் பயன்பாடும் சட்டபூர்வமாக அங்கிகரிக்கபட்டுள்ளது.
----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 24 October 2017

உலகின் முதல் பெண் விமானி

காற்றில் மறைந்து மாயமான உலகின் முதல் பெண் விமானி 
----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday 16 October 2017

தீபாவளி ஸ்பெஷல் - டாப் 10 ரங்கோலி கோலங்கள்

தீபாவளி அன்று உங்கள் வீட்டை வண்ணங்களால் அலங்கரிக்க 
கண் கவரும் 
வண்ண வண்ண ரங்கோலி கோலங்கள்  

Saturday 7 October 2017

பாய் வீட்டு பிரியாணி - சுவையான பிரியாணி ரகசியம்


பாய் வீட்டு பிரியாணி செய்வது எப்படி/பக்ரீத் பிரியாணி ரகசியம்

ரகசிய பிரியாணி மசாலா செய்வது எப்படி?

பிரியாணிக்கு ஏற்ற கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday 3 October 2017

ரெடிமேட் ஜிப் புடவைகள்

இந்த காலத்தில் சில இளைஞர்களுக்கு வேஷ்டி கட்டுவது என்பது மலையை தூக்கி தலை மேல் வைப்பது போன்ற கடினமான காரியமாய் இருந்தது, இப்படி கஷ்டப்பட்டு வேஷ்டி கட்டும் இளைஞர்களின் வசதிக்காக இப்போது ஜிப் வைத்த ரெடிமேட் வேஷ்டிகள் வந்து விட்டன, வேஷ்டி கட்ட தெரியாமல் அவதிப்படும் ஆண்களுக்கு ஜிப் வைத்த ரெடிமேட் வேஷ்டி, ஓகே, ஆனால் இன்றும் புடவை சரியாக கட்ட தெரியாமல் அவதிப்படும் பெண்களும் உண்டல்லவா? அவர்கள் தலைவலியை போக்கும் வகையில் இப்போது ஜிப் வைத்த ரெடிமேட் புடவைகளும் சந்தைக்கு வந்து விட்டன, இந்த ரெடிமேட் புடவையை எப்படி அணிவது? கானொளியில் காணுங்கள்.