Tuesday 31 October 2017

பெண்கள் பாதுகாப்பு கருவிகள்

ம் நாட்டில் படிப்பு, வேலை என்று வீட்டை விட்டு தனியாக வெளியே செல்லும் பெண்கள் திரும்பவும் பத்திரமாக வீடு திரும்புவார்களா? என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பெண்களுக்கு ஒரு சில வக்கிரம் பிடித்த ஆண்களால் (எல்லா ஆண்களையும் சொல்லவில்லை) நேரும் கொடுமைகள் பயங்கரமானவை. ஒவ்வொரு வருடமும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நம் நாட்டில் அதிகரித்து கொண்டே வருகின்றது. ஒரு சில சம்பவங்கள் வெளி உலகுக்கு தெரிய வருகிறது, பல சம்பவங்களில் சம்பந்தப்பட்ட பெண்களின் எதிர்கால வாழ்க்கை குறித்த அச்சத்தினால் வெளி உலகுக்கு தெரிவிக்காமலே பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளை மனதுக்குள் வைத்து குமுறுகின்றனர்.


ஐந்து மாத குழந்தை முதல் நூறு வயது கிழவி யாரையும் இந்த காம வெறி பிடித்த மனித மிருகங்கள் விட்டு வைக்கவில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கீழ்தட்டு சமூக மக்களிடம் மட்டும் தான் என்றில்லை, நன்கு படித்து, வேலைக்கு சென்று, கை நிறைய சம்பாதிக்கும் மேல்தட்டு பெண்களும் கூட தங்கள் அலுவலகங்களில் உடன் வேலை பார்க்கும் ஆண்களாலும், மேலதிகாரிகளாலும் இந்த கொடுமைகளுக்கு தப்புவதில்லை. பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்க செல்லும் பெண்களை காதல் என்ற பெயரில் இளம் பெண்களை சுற்றிவரும் ஒரு சிலர் தான் காதலிக்கும் பெண் தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டாலோ அல்லது திரும்ப தன்னை காதலிக்கா விட்டாலோ அவளை தொடர்ந்து சீண்டி வேதனைக்கு உள்ளாக்குவதும் நடந்து வருகிறது. 

உடலுக்கு எதாவது நோய் வரும் போல் தெரிந்தால் வருமுன் காப்பதற்காக தடுப்பூசி போட்டு கொள்வது போல், இந்த வக்கிரம் பிடித்த மனித மிருகங்கள் வாழ்கையில் குறுக்கிட்டால் அவைகளிடமிருந்து காத்து கொள்ள இந்த தலைமுறை பெண்களுக்கு சில பாதுகாப்பு கருவிகள் இப்போது ஆன்லைனில் கிடைக்க துவங்கியுள்ளது. அத்தகைய பாதுகாப்பு கருவிகள் சிலவற்றை ஓவ்வொன்றாக பார்க்கலாம். 

 பெப்பர் ஸ்ப்ரே: 

ரூம் ஸ்ப்ரே கேள்விபட்டிருப்பீர்கள், அந்த குப்பியில் வாசனை திரவியம் இருக்க வேண்டிய இடத்தில் மிளகு பொடியை நிரப்பி வைத்தால் பெப்பர் ஸ்ப்ரே, கையடக்க பெப்பர் ஸ்ப்ரேயை ஒரு சில நொடிகள் எதிராளி மேல் அடித்தால் கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேல் கண் தெரியாது (கண்ணை திறந்தாலே எரியுமாம்), தனியாக வெளிடங்களுக்கு செல்லும் பெண்கள் அவசியம் வாங்கி வைத்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு சாதனம் இந்த பெப்பர் ஸ்ப்ரே, விளையாட்டுக்கு இதே யார் மேலும் அடித்து விட வேண்டாம், உங்கள் பாதுகாப்புக்கு எதாவது பங்கம் வந்தால் மட்டும் பயன்படுத்துங்கள். தெரியாமல் இதை யாராவது எடுத்து பயன்படுத்திவிட்டால், பாதிக்கப்பட்டவரின் கண்களையும் முகத்தையும் தண்ணீரில் நன்கு கழுவ சொல்லுங்கள். மற்றபடி உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்காது. 



மொபைல் ஸ்டென் கன்: 
பார்ப்பதற்கு மொபைல் போன் போலவே காட்சியளிக்கும் இந்த மொபைல் ஸ்டென் கன்னின் ஒரு பக்கத்தில் இருக்கும் சிறு சுவிட்சை அழுத்தி கொண்டு போனின் முன் பகுதியிலிருக்கும் மெட்டல் பகுதியை எதிராளி மேல் லேசாக உரசினால் போதும், ஹை வோல்ட் கரன்ட் ஷாக் எதிராளி மேல் பாயும், ஒரு சில நிமிடங்களுக்கு சகல நாடியும் ஸ்தம்பித்து போன நிலையில் எதிராளி இருக்கும் போது அந்த இடத்திலிருந்து தப்பிக்க வேண்டியது தான். 





லிப்ஸ்டிக் வடிவ ப்ளாஷ் லைட்: 

பார்ப்பதற்கு லிப்ஸ்டிக் போல காட்சியளிக்கும் இந்த லிப்ஸ்டிக் வடிவ ப்ளாஷ் லைட்டில் உள்ள லைட்டை எதிராளி மேல் அடித்தால் கண்களை குருடாக்குவது போன்ற வெளிச்சம் வரும். ரீசார்ஜபுல் பேட்டரியுடன் வரும் இந்த லிப்ஸ்டிக் வடிவ ப்ளாஷ் லைட் 180 லுமென்ஸ் அளவு வெளிச்சத்தை வெளியிட கூடிய சக்தி வாய்ந்தது. 

                                       



 பெப்பர் பிஸ்டல்: 

முன்பு சொல்லப்பட்ட பெப்பர் ஸ்ப்ரேயின் இன்னொரு வடிவம் தான் இந்த பெப்பர் பிஸ்டல், கையடக்க பெப்பர் ஸ்ப்ரே எற்படுத்தகூடிய அதே விளைவையே இந்த பெப்பர் பிஸ்டலும் ஏற்படுத்தும். இந்த பிஸ்டலை நீங்கள் வெளியே எடுத்தவுடன் எதிராளிக்கு நீங்கள் துப்பாக்கியை எடுக்கிறீர்கள் என்பது தெரிந்து விடும், நிஜ துப்பாக்கி என்று நினைத்து எதிராளி ஓடி விட நேரலாம். 



 ரீசார்ஜபுல் சேஃப்டி டார்ச்: 

பார்ப்பதற்கு டார்ச் போலவே காட்சியளிக்கும் இந்த சேஃப்டி டார்ச்சில் உள்ள இந்த டார்ச் சுவிட்சை அழுத்தி கொண்டு எதிராளி மேல் படும் படி உரசினால் ஹை வோல்ட் கரன்ட் ஷாக் எதிராளி மேல் பாயும். ரீசார்ஜபுல் பேட்டரியுடன் வரும் இந்த சேஃப்டி டார்ச் பெண்களின் பாதுகாப்புக்கு உகந்த சாதனம். 



 ஸெல்ப் டிபன்ஸ் சேஃப்டி ராட்: 

 பழைய ட்ரான்சிஸ்டர் கருவிகளில் உள்ள இழுத்து விட கூடிய ஆன்டெனா கம்பி போல் காட்சியளிக்கும் இந்த கம்பியில் உள்ள பிளாஸ்டிக் பகுதியில் உள்ள சுவிட்சை அழுத்தி கொண்டு எதிராளி மேல் படும் படி உரசினால் ஹை வோல்ட் கரன்ட் ஷாக் எதிராளி மேல் பாயும். இந்த ஷாக் ஒரு சில நிமிடங்கள் எதிராளியை நிலைகுலைய செய்யும் தவிர உடலுக்கு வேறு எந்த தீங்கும் விளைவிக்காது. 



 ஐநூறு ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் விலைக்குள் கிடைக்கும் இந்த சுய பாதுகாப்பு சாதனங்கள் ஆன்லைனில் விற்பனையாகி வருகின்றது. நம் நாட்டில் இந்த கருவிகளின் விற்பனையும் பயன்பாடும் சட்டபூர்வமாக அங்கிகரிக்கபட்டுள்ளது.
----------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்